Posts

Showing posts from 2011

என்னைப் போல் ஒருவன்

என்னைப் போலவே ஒருவனைப் பார்த்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். அந்திமயங்கும் நேரம் போதையின் உச்சத்தில் ஹீரோ ஹோண்டாவை ஸ்டார்ட் பண்ண முயற்சித்து முயற்சித்து முடியாமல் வண்டியோடு விழுந்தவனைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். கடந்து போன பேருந்திலிருந்து கவனித்தபோது கன்னிமாரா நூலக வளாகத்திலிருந்து வெளிவந்தவனை நானென எண்ணிக் குரல் கொடுத்திருக்கிறான் இவன். என்னைப்போலவே காணப்பட்டவர் இருந்தார்களாவென உறுதிப்படுத்தவியலாதாயினும் இருக்கின்றனர் நிச்சயமாக இவர்கள் அவனைப் போலவே அவனும் இவனைப் போலவே இவனும்.

பரமேஸ்வரியின் வாழ்க்கைக் குறிப்புகள்

குருமூர்த்தியின் மகளாய்ப் பிறந்தாள் பரமேஸ்வரி. செல்ல மகளாய் வளர்ந்தாள். கல்யாணம் நடந்தபோது தனபாலனின் தங்கை. புகுந்தவீட்டில் எப்போதுமவள் மணிகண்டன் மனைவிதான். பிள்ளைப்பேறு அவளை குமார் அம்மாவாக்கியது. பின்னிரவுப் பொழுதொன்றில் கடந்த வாரம் தன் எண்பத்திமூன்றில் காலமானாள் சதீஷ் பாட்டியாக. பரமேஸ்வரி ஒருபோதும் பரமேஸ்வரியாய் அடையாளம் காணப்பட்டதாக அவளின் வாழ்க்கைக் குறிப்புகளில் தடயங்களேதுமில்லை.                  தமிழ்மணவாளன்