Posts

தமிழ்மணவாளன் எழுதிய,’உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்’, நூல் வெளியீடு

Image

தமிழ்மணவாளன் கவிதை: குதிரை சவாரி

ஈரம் படிந்த மணற்பரப்பின் அந்தியில் குளம்படித்தடம் பதித்து குழந்தைகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் பாவனையோடு குதிரையொன்று வந்து நிற்கிறது. ’சுற்றொன்றுக்கு வெறும் ஐந்து ரூபாய் தான்’ ஏறி அமர்ந்தவுடன் கம்பீரமாய்க் கடிவாளம் பற்றுகிறான் ஓர் இளவரசனைப் போல. பார்வை தூரம் கடந்ததும் பதற்றத்தில் விழிகள் நிலைகுத்தி நிற்க, புலப்பட மெல்ல மீண்டது புரவி. தேசம் பிடித்து நாட்டுக்குத் திரும்பும் மன்னனைப் போன்ற வெற்றிக் களிப்புடன். பின்னொரு நாளில் இதே நினைவுடன் அடம் பிடிக்கிறான் கைகளை ஊன்றி முழங்காலிட்டு குதிரையாகினேன் முதுகில் ஏறி அமர்ந்ததும் காலரை இறுக்கிப் பிடிக்கிறான் கடிவாளத்தைப் போல. ‘வேகமா போ..குதிரை வேகமா போ’ மழலைக் குரலின் மிரட்டல் வேகம் கூட்டியது குதிரைக்கு குழந்தைக்கு என்னை அப்பாவாகப் பிடிக்கிறதோ என்னவோ குதிரையாகப் பிடிக்கிறது மிகவும்.

தமிழ்மணவாளன் கவிதை:

Image
உ ன்னைப் பற்றி யாரேனு மேதேனும் கூறும் போதுடனே யென்னுள் எழும் பதற்றத்தையும் உண்டாகும் நடுக்கத்தையும் கொண்டென்னுள் ளுன்றன்பால் எனக்குள்ள அன்பின் அதிதீவிரத்தைப் புரிந்து கொள்கிறார்கள். மேலும் எழும் பேச்சாலுருவாகும் ரணத்தை மறைத்த போதிலுமூறித்  ததும்பிச் சொட்டும் துயரத்தின் இரத்தத்தைத் தம் கள்ள நாக்கினால் நக்கிச் சுவைக்கிறார்கள். குருதி சுவையறிந்தோர் குதறாமல் விடமாட்டார்கள் என்பதுணர்ந்து ‘அனிஸ்தீஷியா’ கொடுத்த மனசாய் எண்ணம் மயங்கி இறந்து கிடக்கிறேன். நீயோ மெல்லக் கையசைத்து புன் முறுவலித்தபடி கடந்து போகிறாய் உன் வாழ்க்கையை நீ வாழ்வதாய்ச் சொல்லி.

தமிழ்மணவாளன் கவிதை:கண்ணெதிரே

Image
                                                 -----தமிழ்மணவாளன் கண்ணெதிரே விரிந்திருக்கும் திரைச்சீலையென காற்றுவெளியெங்கும் கலைத்துக் கலைத்து வரைந்து கொண்டிருக்கிறது   காலம் தன் சித்திரங்களை காலைக்கென்று ஒரு வண்ணம் கடும்பகல் காட்டும் ஒரு வண்ணம் அந்திப் பொன்மாலை ஒரு வண்ணம் இரவின் ஏகாந்தம் ஒரு வண்ணம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வண்ணத்திலுமுன்னை வரைந்து காட்டுவதால் புரிந்து கொள்வதெளிதாகிறது ஒரு சமயம் பச்சை ஒரு சமயம் மஞ்சள் ஒரு சமயம் நீலம் ஒரு சமயம் சிவப்பு ஒரு சமயம் கறுப்பு இன்னும் சமயத்திற்கேற்ப வரையப்பட்டவுன் சித்திரங்கள் புனைவுகளின் பாதுகாப்போடு புதைந்து கிடக்கின்றன மூளையின் ஆழ் மடிப்புகளில்   அதிலொன்றும் பிரச்சனையில்லை ஏதோ ஒரு நிர்பந்தத்தின் அழுத்தம் எல்லாச் சித்திரங்களையும் ஏக காலத்தில் மீட்டெடுக்கும் முயற்சியில் தான் நேர்ந்து விடுகிறது பிறழ்வும் பிளவும்

தமிழ்மணவாளன் கவிதை:இரவின் சம்பாஷணை

Image
                                                              ---தமிழ்மணவாளன் இரவின் சம்பாஷணை ஒ ளிபுகவியலா வடர்ந்த மரங்களின் வனத்துள் தனிமை அச்சம் போக்க தன் துணை தேடி அரற்றிக் கொண்டிருக்கிறது பெயரறியா சிறு பூச்சி நிலவினை ஒளித்து வைத்தால் இரவின் சம்பாஷணையை இருள் மொழிகூட்டி நிகழ்த்தலின் சாத்தியத்தை யாரோ சொல்ல உரையாடலின் விழிகளை சன்னல் கதவுகள் அடைக்கும் பொறாமையின் அடர் கறுப்பாய் காற்றின் அரூப மேனியெங்கும் உலர்ந்திருக்க சம்பாஷணையின் சொற்கள் மூச்சுப்பயிற்சி செய்யத் தொடங்கும் யெதிர்த் திசைப் போகும் புகைவண்டியில் மறைக்கும் கணநேர முகமென அதிர்ந்த மின்னொளிக் கீற்றில் வார்த்தைகளின் உஷ்ணமாய் குழம்பென வழியும் காமத்தின் நா நழுவிக் குழறும் இரவின் சம்பாஷணை

தமிழ்மணவாளன் கவிதை:சூட்சமம்

Image
                                                                 ----தமிழ்மணவாளன் சூட்சமம் உ டன்பாட்டுக்கான எந்த சொற்களுமில்லை யெனினும் உரையாடல் இடையறாது நிகழ்கிறது ‘வினீகரில்’ ஊறவைத்த செயல்பாடுகளை அவ்வப்போது வெளியெடுத்து தேவைக்கான மசாலாவுடன் மணக்க மணக்க காலத்தின் சுவை நாவின் உணவாகிறது. நுகர்வின் வெளி வெவ்வேறென்பதால் அதீத புளிப்பின் அசௌகர்யம் எங்கும் பதிவாவதேயில்லை. சமயோஜிதத்தின் விருந்தோம்பலில் முக்கியமான பண்டமாய் முகம் காட்டுகிறது. எதெப்படியாயினும் பரிமாறலில் தானே இருக்கிறது சூட்சமம்.

தமிழ்மணவாளன் கவிதை:வெளிச்சம் விற்பவன்

Image
வெளிச்சம் விற்பவன் ” வெ ளிச்சம் வாங்கலியோ வெளிச்சம் வெளிச்சம் வாங்கலியோ வெளிச்சம்” சோன்பப்படி ஜாடியை சைக்கிள் கேரியரில் வைத்துக் கொண்டு சென்றவனின் குரல் கேட்டு இருளில் இருந்து வெளியில் வந்தோர் அவனிடம் விலைபேசி வசதிக்கேற்ப வெளிச்சத்தைப் பொட்டலமாய்க் கட்டி வாங்கிக் கொண்டு போக வெளிச்சம் காலியான ஜாடி இருளானது இப்போது விற்பதற்கு அவனிடம் வெளிச்சம் இல்லை வான் வீட்டுக் கூரையின் உள் முகட்டில் ஒட்டடையாய் அப்பிக்கிடந்த மேகத்தை துடைப்பத்தால் சுத்தம் செய்ததும் உள்ளிருந்த நிலவு வெளிச்சத்தை சொரியத் தொடங்க அதை ஜாடியில் நிரப்பிக் கொண்டவன் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு சைக்கிளை மெல்ல நகர்த்துகிறான் இருளான இடம் நோக்கி