தமிழ்மணவாளன் கவிதை:வெளிச்சம் விற்பவன்
வெளிச்சம்
விற்பவன்
”வெளிச்சம்
வாங்கலியோ வெளிச்சம்
வெளிச்சம்
வாங்கலியோ வெளிச்சம்”
சோன்பப்படி
ஜாடியை சைக்கிள் கேரியரில்
வைத்துக்
கொண்டு சென்றவனின் குரல் கேட்டு
இருளில்
இருந்து வெளியில் வந்தோர்
அவனிடம்
விலைபேசி
வசதிக்கேற்ப
வெளிச்சத்தைப் பொட்டலமாய்க்
கட்டி
வாங்கிக் கொண்டு போக
வெளிச்சம்
காலியான ஜாடி இருளானது
இப்போது
விற்பதற்கு அவனிடம் வெளிச்சம் இல்லை
வான்
வீட்டுக் கூரையின் உள் முகட்டில்
ஒட்டடையாய்
அப்பிக்கிடந்த
மேகத்தை
துடைப்பத்தால் சுத்தம் செய்ததும்
உள்ளிருந்த
நிலவு
வெளிச்சத்தை
சொரியத் தொடங்க அதை
ஜாடியில்
நிரப்பிக் கொண்டவன்
என்னைப்
பார்த்துச் சிரித்துக் கொண்டு
சைக்கிளை
மெல்ல நகர்த்துகிறான்
இருளான
இடம் நோக்கி
Comments
Post a Comment