தமிழ்மணவாளன் கவிதை:சூட்சமம்
----தமிழ்மணவாளன்
உடன்பாட்டுக்கான
எந்த சொற்களுமில்லை யெனினும்
உரையாடல் இடையறாது நிகழ்கிறது
‘வினீகரில்’ ஊறவைத்த செயல்பாடுகளை
அவ்வப்போது வெளியெடுத்து
தேவைக்கான மசாலாவுடன் மணக்க மணக்க
காலத்தின் சுவை நாவின் உணவாகிறது.
நுகர்வின் வெளி வெவ்வேறென்பதால்
அதீத புளிப்பின் அசௌகர்யம் எங்கும்
பதிவாவதேயில்லை.
சமயோஜிதத்தின் விருந்தோம்பலில்
முக்கியமான பண்டமாய் முகம் காட்டுகிறது.
எதெப்படியாயினும்
பரிமாறலில் தானே இருக்கிறது
சூட்சமம்.
Comments
Post a Comment